Powered By Blogger

Friday, August 6, 2010

பொறியியல் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண் குறைப்பு நடவடிக்கைதமிழக ஆட்சியாளரின் கல்விச் சேவையல்ல;

உயர்கல்வி உண்மையாகவே அரசின் வசம் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் பெருகிவரும் கல்வித்தேவை முழுவதையும் நிறைவேற்ற நிதிஒதுக்கீடு செய்ய முடியாது என்று கருதிய பல்கலைகழக மானியக்குழு புதிய உயர்கல்வி நிலையங்கள் திறப்பதை நிறுத்தியது. அச்சமயத்தில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற பெரும் ஜீவ நதிகள் ஓடி விவசாயப் பொருளாதாரம் சிறப்பாக விளங்கி பெரும்பான்மையான மக்களை அதில் ஈடுபடுத்தி வைத்திராத மாநிலங்களில் கல்வி மூலம் மட்டுமே தங்களது எதிர்கால வாழ்க்கையினை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்ற நோக்கில் இருந்த ஏராளமானோருக்கு புது கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதும் அதன் மூலம் கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுவதும் அத்தியவசியமாக இருந்தது.


எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த உயர் கல்வியின் பாலான தனியார் மயம்

அந்நிலையில் அப்போது தமிழக முதல்வராக இருந்த திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மருத்துவ பொறியியல் கல்லூரிகளில் தனியார் மயத்தைக் கொண்டுவந்தார். இதனால் கல்வி வியாபாரமயமாகிவிடும் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவரது இந்த நடவடிக்கையை எதிர்த்துக் கிளம்பிய போதும் அவர் அசரவில்லை.
பெரும்பான்மையான மக்களும் இதனை பெரிய அளவில் எதிர்க்கும் மனநிலையில் இல்லை. அதற்குக் காரணம் பலரும் நினைத்தது போல் மக்கள் எம்.ஜி.ஆர். மீது குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டவராய் இருந்தனர் என்பதல்ல. மாறாக அவ்வாறு அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனியார் உயர்கல்வி நிலையங்களில் பாதி இடங்கள் நிர்வாகத்தால் நிரப்பப்படுபவையாக இருந்தாலும் மீதி இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் நல்ல தகுதியுள்ள மாணவர்களுக்கென்று ஒதுக்கப்படுபவையாக இருந்தன. அவர்களுக்கான கட்டணமும் நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் பெறுவோருக்கானதைக் காட்டிலும் மிகக்குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது.
புதிய கல்லூரிகளே அரசால் இனிமேல் திறக்கப்படாது என்றிருந்த நிலை மாறி தனியார் கல்லூரி வடிவத்திலாவது அரசு கல்லூரிக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக இருந்தாலும் கூட ஓரளவு கீழ்த்தட்டு மத்தியதர மக்கள் சிரமப்பட்டாவது செலுத்தி அணுகும் விதத்தில் தகுதி அடிப்படையில் வரும் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் இருந்ததால் மக்கள் அதை வரவேற்கவே செய்தனர்.

அனைவர் நலனையும் கருத்திற் கொண்ட நுழைவுத் தேர்வு

அத்துடன் மாணவர் திறனை ஓரளவு சரியாகக் கணிக்கும் அவர்களின் +2 மதிப்பெண்களோடு நுழைவுத் தேர்வு ஒன்றினைக் கட்டாயமாக்கி அதன் மூலம் பெறும் மதிப்பெண்களும் சேர்த்து கணக்கிடப்பட்டு அவற்றின் அடிப்படையில் இடங்கள் வழங்கப்பட்டதால் கல்வியின் தரம் ஓரளவு பராமரிக்கப் படுவதற்கான சூழ்நிலையும் இருந்தது. அத்தனை சிரமமின்றி மாணவர் தரப்பட்டியல் தயாரிக்கும் வாய்ப்பும் அப்போது இருந்தது. பல காலம் நீடித்த இந்த முறை இந்தியா முழுவதும் பல மாநில மக்களால் ஒரு நல்ல முறையாகக் கருதப்பட்டது.
அக்காலகட்டத்தில் உயர்கல்வியில் சேர்வதற்குப் பல மாநிலங்களில் நுழைவுத் தேர்வு மட்டுமே அடிப்படையாக இருந்தது. அதனால் பல நிறுவனங்கள் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே கற்பிக்கும் போக்கைக் கடைப்பிடித்தன. ஒரு பாடத்தைப் பொறுத்தவரையில் அது குறித்த அனைத்து வி­யங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் பாடப் புத்தகப் படிப்பை பெருமளவு அந்நிறுவனங்கள் கருத்தில் கொள்ளவில்லை.
மேலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கிராமப்புறங்களில் அதுபோல் நுழைவுத்தேர்வு கண்ணோட்டத்தில் பாடம் நடத்துவதற்குத் தேவையான அனுபவமும் அறிவும் பெற்ற பல ஆசிரியர்களும் இல்லை. எனவே நுழைவுத்தேர்வு மட்டுமே ஓரே அளவுகோல் என்ற நிலை உருவாக்கப்பட்டால் அப்பகுதியில் இருக்கும் மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களில் இடம் பிடிப்பது சாத்தியமற்றதாகிவிடும். அதே சமயத்தில் பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே என்ற நிலை இருந்தால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் கோணத்திலேயே கற்பித்தல் ஆகிவிடும். அது அகில இந்தியப் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்களைப் பின்தங்கச் செய்துவிடும்.
குறிப்பாக மருத்துவ, தொழில்நுட்ப படிப்புகளுக்குத் தேவைப்படும் படித்தவற்றை நடைமுறைப்படுத்தும் கோணத்தில் படிக்கும் போக்கு இல்லாமல் போய்விடும். எனவேதான் மிகவும் விஞ்ஞானப்பூர்வ அடிப்படையில் உருவாக்கப்பட்ட பொதுத்தேர்வு நுழைவுத்தேர்வு இரண்டின் மதிப்பெண்களையும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு கணிதத்திற்கு முன்னுரிமை கொடுத்தும் , மருத்துவப் படிப்பிற்கு உயிரியியல் பாடத்திற்கு முன்னுரிமை கொடுத்தும் மதிப்பீடு செய்யும் முறை கொண்டுவரப் பட்டது.
அடிப்படைக் கல்வி கூடப் பெறாதவரான எம்.ஜி.ஆர். அவர்கள் கல்விமான்களின் உதவியோடு அத்தகைய ஒரு விஞ்ஞானப்பூர்வ முறையினை வகுத்தெடுத்து அமல் செய்தார். அந்த அளவிற்கு மக்கள் நலனைக் கருதும் மனநிலை அவரிடம் இருந்தது. அதாவது கல்வி எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை; தன் கட்சிக்கு வாக்குகள் கிடைத்தால் போதும் என்று கருதும் கேவலமான போக்கு அவரிடம் இல்லை.

கல்வி முதலாளிகளின் காட்டுத்தனமான சுரண்டலுக்கு வழி திறந்துவிட்ட ஆட்சியாளர்

அதன் பின்னர் அவரது மறைவிற்குப் பின் வந்த அரசாங்கங்கள் அவரது கட்சியை சேர்ந்தவையாக இருந்தாலும் அல்லது இன்றிருப்பது போல் “தமிழ்” தலைவர்களின் ஆட்சியாக இருந்தாலும் அவை அவர் கொண்டுவந்த திட்டத்தில் இருந்த மக்கள் ஆதரவு மற்றும் விஞ்ஞானப்பூர்வ அம்சங்களைக் காப்பாற்றிப் பராமரிக்கவில்லை. முதலில் நீதிமன்றத் தீர்ப்புகளைச் சாக்காக வைத்து தகுதி அடிப்படையில் உயர்கல்வி நிலையங்களில் இடம் பிடிக்கும் மாணவர் குறைந்த கட்டணம் செலுத்தினாலே போதும் என்ற நிலை மாற்றப்பட்டது. அடுத்து கிராமப்புற மாணவர்கள் சிரமப்படுகின்றனர் என்ற பொய்யான சாக்கில் நுழைவுத்தேர்வு முறையும் கைவிடப்பட்டது.
மேலும் கல்விக் கட்டணங்கள் கண்டபடி உயர்த்தப்பட்டன. அதாவது புதிதாகத் தனியார்களால் திறக்கப்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அனைத்து வசதிகளுடனும் தகுதிபெற்ற ஆசிரியர்களைக் கொண்டும் அவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மத்திய ஊதியக்குழு பரிந்துரைக்கும் ஊதியத்தை வழங்கியும் நடத்தப்பட்டால் ஆகும் செலவினைக் கருத்தில் கொண்டு மாணவர் கட்டண விகிதங்கள் உயர்த்தப்பட்டன.
கல்வி நலனுக்காக கல்வி முதலாளிகளை ஓரளவு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த எம்.ஜி.ஆர். அவர்களைப் போல் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் இல்லை. கல்வி முதலாளிகளுக்கு விலைபோகக் கூடியவர்களாக ஆகிவிட்டனர். அதனால் கல்வியின் பெயரில் லாப வேட்டை நடத்த சரியான களமாக தமிழகம் ஆகிவிட்டது.
அந்நிலையில் மழைக்காலக் காளான்கள் போல் தனியார் பொறியியல் கல்லூரிகள் பெரும் எண்ணிக்கையில் உருவாயின. கலைக் கல்லூரிகளைப் போல் பல மடங்கு அவை அதிகரித்தன. அவற்றில் ஆதார வசதிகள் உள்ளனவா என்று பார்க்கும் போக்கு, பணத்தின் பிரகாசிக்கும் பார்வை அனுமதி வழங்கும் அமைப்புகள் பக்கம் வீசியதால் மங்கி மறைந்து போனது.
பெரும்பாலும் இளங்கலைப் பட்டதாரிகளே பெரும்பான்மையான பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு உடல் உழைப்புச் செய்யும் தொழிலாளர் பெறுமளவிற்கே ஊதியம் வழங்கப்பட்டது; இப்போதும் வழங்கப்படுகிறது.
கல்லூரிகள் இத்தனை பெரும் எண்ணிக்கையில் தமிழகத்தில் உருவானதால் தென் மாநிலங்களின் வசதி படைத்த குடும்பங்ளைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலோர் பொறியியல் பட்டதாரி என்ற சான்றிதழ் பெற்றால் போதும் என்ற அடிப்படையில் இங்குள்ள கல்லூரிகளில் சேரத் தொடங்கினர்.

முதலில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடங்கள் வழங்க வேண்டும் என்றிருந்த நிலையைத் தங்கள் பண பலத்தைக் கொண்டு மாற்றி அமைத்த நிர்வாகங்கள் அதே பண பலத்தைக் கொண்டு அவர்கள் நடத்தும் கல்வித் தொழில் லாபகரமாக நடைபெற எவையயல்லாம் தேவையோ அவை அனைத்தையும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டன. அதில் ஒன்றுதான் தரமான கற்பித்தல் இல்லாத இந்த ஏராளமான பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் சான்றிதழ்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிட்டுவதற்காக கல்லூரிகள் அனைத்தையும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரில் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்ததாகும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரும் சேர வாய்ப்புள்ள மாணவர் எண்ணிக்கைக்கு அதிகமானதாக கல்லூரிகள் இருந்ததால் அவற்றில் பல இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படாமலே போகும் நிலை உருவானது. படிப்படியாக அரசாங்கங்கள் வளர்ந்துவரும் கல்வி முதலாளிகளின் பைகளில் உள்ளவையே என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் அக்காலி இடங்களை நிரப்ப எதையயல்லாம் செய்ய வேண்டுமென்று கல்வி முதலாளிகள் தங்களது கண் சிமிட்டல்கள் மூலம் கட்டளையிடுகின்றனரோ அவற்றிற்கு உகந்த விதத்திலான மாறுதல்களைத் கல்வித் திட்டங்கள் என்று ஆரவாரமாக அறிவிப்பது ஆட்சியாளர்களின் நடைமுறையாகிவிட்டது.


மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை

அத்தகைய ஒரு மாறுதல்தான் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு தற்போதுள்ள குறைந்தபட்ச மதிப்பெண்களை இன்னும் குறைந்ததாக ஆக்கும் தமிழக அரசின் மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை.
ஒருபுறம் மாநில அரசு தமிழகக் கல்வி முதலாளிகளின் சேவையில் தன்னை இவ்வாறு நூறு சதவீதம் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு இதே கல்வி முதலாளிகளுக்கு உதவி புரிவதற்காகக் கல்விக் கடன் திட்டத்தில் பல சலுகைகளை வழங்கி உள்ளது. அதாவது திரும்பச் செலுத்தப்படாமல் பல கல்விக் கடன்கள் போவதால்தான் வங்கிகள் அவற்றை வழங்கத் தயங்குகின்றன. எனவே வங்கிகளின் அத்தயக்கத்தினைப் போக்கும் நோக்கோடு ஒரு தனி நிதியினை ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டு அதிலிருந்து செலுத்தப்படாமல் போகும் கல்விக் கடன்களின் வட்டி போன்றவற்றைச் செலுத்தும் திட்டத்தினைக் கொண்டுவரப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை மக்கள் தொகையில் அரிதிப் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவர்கள் அரசின் இலவசத்திட்டங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசியினைப் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள்; இலவசத்திட்ட மானியங்களை வங்கிக் கணக்கில் தான் செலுத்துவோம் என்பது போன்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படும் வேளைகளில் தவிர பிற சமயங்களில் வங்கிகள் பக்கமே தலைவைத்துப் படுக்காதவர்கள்.

உண்மையான தேவையில் உள்ள அவர்கள் கல்விக்கடன் பெறுவதற்காக வங்கிகளை அணுகுவது மிகவும் அபூர்வம். வங்கி நிர்வாகங்களோடு கிராம , நகர்ப்புறங்களில் ஓரளவு உறவும் அவ்வப்போது மிரட்டல்கள் மூலம் காரியமாற்றிக் கொள்ளும் போக்கும் கொண்டவர்களாக இருப்பவர்கள் அரசியல் வாதிகள் , அரசு அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வசதிபடைத்தவர்களே.

ஏழை மக்களைப் பொறுத்தவரை வங்கிக்கடன் ஒரு எட்டாக்கனி
முன்பிருந்த கல்வி முறையில் ஒரு சில நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஏழை எளிய மாணவர்களாவது அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த கல்விக் கட்டணம் ஓரளவு எட்டிப்பிடிக்க முடிந்ததாக இருந்ததால் பொறியியல் போன்ற உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர். தற்போது கட்டணங்கள் அத்தகைய மாணவர்கள் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாததாகி விட்டதால் அவர்களது உயர்கல்விக் கனவு அப்பட்டமாகத் தகர்ந்து போய்விட்டது.

அதே சமயத்தில் காரியக்காரர்கள், தனவான்கள், முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல்வாதிகள், அரசு அதிகார வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் போன்றவர்களின் பிள்ளைகள் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது போல தரைமட்டமான மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூட அவர்களை பொறியியல் கல்லூரிகளில் நன்கொடைகள் கொடுத்துச் சேர்ந்துவிட முடியும்.

வங்கிகளில் செல்வாக்குச் செலுத்திக் கடன் பெறவும் முடியும். அவர்கள் தேறி பட்டதாரிகளாக வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி கட்டணமாகச் செலுத்தப்படும் பணம் அவர்களுடையதாக இல்லாததால் பொறியியல் கல்லூரிக்குள் நுழைவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு எளிதில் ஏற்பட்டு விடும். இந்தப் போக்கு உருவாவதற்கே மத்திய அரசின் தற்போதைய திட்டம் வழிவகுத்துள்ளது.

இதற்குப் பதிலாக எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்த கூடுதல் மதிப்பெண் பெற்றோருக்குக் குறைந்த கட்டணம் என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அனுமதி என்ற நிலை பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் விசயத்தில் மேற்கொள்ளப்பட்டால் அதன் மூலம் ஓரளவு தகுதியுள்ள ஏழை மாணவர்களும் பயன்பெறும் நிலை ஏற்படும். இல்லையயனில் செலுத்தப்படாதக் கல்விக் கடனை அரசு செலுத்தும் என்பதற்குப் பதிலாக கூடுதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்காகக் கல்விக் கட்டணத்தைக் குறைவாக நிர்ணயித்து மீதியை அரசே கல்லூரி நிர்வாகங்களுக்கு வழங்கும் முறையைக் கொண்டுவந்தால் அது ஏழை மாணவர்களுக்குச் சிறிதளவேனும் உதவும்.

அதைவிடுத்து மத்திய அரசு உருவாக்க எத்தனித்துள்ள தவணைதவறும் கல்விக்கடன்களை திரும்பச் செலுத்த உதவும் அமைப்பு உண்மையில் ஒருபுறம் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையையே செய்யும். அதாவது வசதி படைத்தவருக்கும் வங்கிக்கடன் வளர்ச்சிக்கும் உதவுவதையும் , கல்வி முதலாளிகளின் நலன்களை முழுமையாக கட்டிக் காப்பதற்குமே உதவும் ஆட்சியாளர்கள் எப்போதுமே அடிப்படையில் முதலாளித்துவ நலன் பேணுபவர்களாக இருந்துள்ளனர். முதலாளித்துவ உற்பத்தி முறைக்குத் தேவைப்படும் பயிற்றுவிக்கப்பட்ட இளைய தொழிலாளர் படையை ஏற்படுத்துவதற்காகக் கல்வியை குறைந்த கட்டணத்தில் வழங்கும் வேலையை ஒரு காலத்தில் செய்தனர்.
ஆனால் இன்று சமூகத்திற்குப் பயன்படும் பொருள் உற்பத்தி முதலாளித்துவச் சுரண்டலின் காரணமாகத் தவிர்க்க முடியாமல் உருவாக்கப்படும் சந்தை நெருக்கடியினால் தேக்கநிலைக்கு ஆளாகியுள்ள நிலையில் அம்முறையைக் கைவிட்டுவிட்டு உற்பத்தித் துறையில் ஈடுபடுத்த முடியாமல் முதலாளிகளின் கரங்களில் குவிந்து கிடக்கும் மூலதனத்தைக் கல்வியின் பக்கம் திருப்பி அதில் முதலீடு செய்து ஆசிரியரையும் மாணவரையும் சுரண்ட வழிவகை ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

கல்விச் சேவையைக் கைவிட்டு கல்வி முதலாளிகளின் சேவையை சிரமேற்கொண்டு செய்யும் ஆட்சியாளர்

அதற்கு உகந்த விதத்தில் அரசுக் கல்வி நிலையங்களைத் தேவைப்படும் எண்ணிக்கையில் உருவாக்காமலும் , அரசு கல்வி நிலையங்களில் கிடைக்கும் கல்வி உரிய கண்காணிப்பின்மை காரணமாகத் தரங்கெட்டுப் போக அனுமதித்தும் தனியார் கல்வி நிலையங்கள் லாபகரமாக நடைபெற உதவுபவையே மாநில அரசின் தகுதி மதிப்பெண் குறைப்பு நடவடிக்கையும் மத்திய அரசு அறிவித்துள்ள தவணை தவறும் கல்விக் கடன்களுக்கான வட்டியினைச் செலுத்த உதவும் அமைப்புமாகும்.
இந்நடவடிக்கைகள் எவ்வாறு இந்த அரசுகள் ஏற்கனவே அமலில் இருந்த ஒரு சில உருப்படியான மக்களுக்கான சலுகைகளைக் கூடச் செய்யத் தவறி வெட்ட வெளிச்சமாக முதலாளித்துவ நலன்களை மட்டுமே பேணுபவையாக ஆகிவிட்டன என்பதையே வெளிப்படுத்துகின்றன.

No comments:

Post a Comment