
மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.