Powered By Blogger

Saturday, January 14, 2012

ஊழலுக்கு எதிரான முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டியவர் ஜே.பி. ஆட்சியைப் பிடிக்க ஊழல் முழக்கத்தை கையிலெடுக்கும் அத்வானி


திருடன் ஒருவன் பலர் அவனை விரட்டும் போது ஒரு கட்டத்தில் விரட்டுபவர்களுக்குத் தெரியாமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு திருடன் திருடன் என்று அவனும் கூறிக்கொண்டு ஓடித் தப்பிக்கும் காட்சியை அடிக்கடி திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நமது நாட்டின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால் அக்காட்சி தான் நினைவிற்கு வருகிறது. 

பி.ஜே.பி. கட்சியின் முக்கிய தலைவரும் குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான திரு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல விரும்பிய போது அவருக்கு அமெரிக்க அரசு விசா கொடுக்க மறுத்தது. அது மட்டுமல்ல அக்கட்சியின் மிக முக்கிய தலைவரான எல்.கே.அத்வானி அவர்கள் லண்டன் சென்ற போது அங்கு கடுமையான மக்களின் எதிர்ப்புகளை அவர் சந்திக்க வேண்டிருந்தது. அப்போது அவர் வெளிப்படையாகவே இந்தியாவில் அவரது கட்சியினரால் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்பட்ட சம்பவங்களுக்காக மன்னிப்புக் கோரினார். 


அச்சம்பவங்கள் வேறெவையும் அல்ல. 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்பு குஜராத்தின் சிறுபான்மை முஸ்லீம் இனத்தவர் மீது சங்பரிவாரத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிகழ்வுகளுமே. இப்போதும் அது குறித்த வழக்குகள் முற்றிலும் முடிந்து விடவில்லை. 

அத்தாக்குதலில் ஈடுபட்ட 31 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகச் சமீபத்திய செய்தியாகும். அது மட்டுமல்ல அப்போது குஜராத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணிபுரிந்த பட் அவர்கள் சிறுபான்மை இனத்தவருக்கு எதிராக அப்போது நடந்த வன்முறையினை பெரிய அளவு கண்டுகொள்ள வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாகத் தெரிவித்த கருத்து இப்போதும் பி.ஜே.பிக்குப் பெரும் தலைவலியாக உள்ளது. 

அதையொட்டி அவர் குஜராத் காவல் துறையால் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பதும் அவருக்குச் சாதகமாகச் சாட்சியம் அளிப்பார் என்று கருதப்பட்ட ஒருவர் மிக சமீபத்தில் கொலையுண்டிருப்பதும் அக்கொலைக்கு காரணம் சொந்தப் பகை என்று குஜராத் காவல்துறை தெரிவித்திருப்பதும் இப்போது சுடச்சுடப் பத்திரிக்கைகளில் வந்துகொண்டிருக்கின்றன. 

இந்த வன்முறை குறித்து நரேந்திர மோடி அவர்கள் அப்போது முன்வைத்த ஒரு முத்தாய்ப்பான கருத்தும் மிகவும் பிரபலமானது. அதாவது அவர் நியுட்டனின் மூன்றாவது விதியான ஒவ்வொரு செயலும் அதற்குச் சமமான எதிரான செயல் ஒன்றினை நிச்சயம் விளைவிக்கும் என்ற கருத்தே அது. 

அதாவது கோத்ராவில் ரயிலை எரித்து சங்பரிவாரத்தினர் பலரது மரணத்திற்குக் காரணமாக இருந்த சிறுபான்மை முஸ்லீம் இனத்தவர்கள் ரயில் எரிப்பிற்குப் பின் நிகழ்ந்தது போன்ற ஒரு வன்முறையினை எதிர்கொண்டே தீர வேண்டும் என்று பொருள்படும் விதத்தில் அவர் அக்கருத்தை முன்வைத்தார். பி.ஜே.பியின் பல காலம் மறைக்கப்பட்ட பாசிஸ முகக்கூறு இச்சம்பவம் மற்றும் மோடியின் மேற்கூறிய கூற்று ஆகியவற்றின் மூலம் மீண்டும் ஒருமுறை பெரிதும் அம்பலமானது. 

மதநல்லிணக்க உண்ணாவிரதம்

இத்தகைய ‘சிறப்பு அம்சங்கள் பொருந்திய’ திரு நரேந்திர மோடி தற்போது கடந்த செப்டம்பர் 17ம் நாளன்று உண்ணாவிரதம் ஒன்றினை மேற்கொண்டார். அதாவது குஜராத் மக்கள் மதவேறுபாடுகள் கடந்து நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாக அவர் அறிவித்தார். 

ஜன்சேத்னா யாத்திரை முழக்கமும் முனகலும்

இது ஒருபுறமிருக்க அக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ரத யாத்திரைப் புகழ் எல்.கே.அத்வானி அவர்கள் ஜன் சேத்னா யாத்ரா என்ற பெயரில் ஒரு யாத்திரையினைத் தொடங்கினார். ஊழலுக்கும் கறுப்புப் பணத்திற்கும் எதிரானதே அது என்று அவர் அறிவித்திருக்கிறார். அந்த யாத்திரையின் போது ஊழலுக்கு எதிராகப் பல மாநிலங்களில் முழங்க முடிந்த அவரால் ஒரு மாநிலத்தில் மட்டும் முணங்கத்தான் முடிந்தது. 

ஆம் கர்நாடகாவில் அவரால் அத்தனை உணர்ச்சிப்பூர்வமாக ஊழலுக்கு எதிராக முழங்க முடியவில்லை. அதற்குக் காரணம் அப்போது தான் அவரது கட்சியின் கணக்கைத் தென் மாநிலங்களில் தொடங்கியவரும் வெற்றி மேல் வெற்றிகளைக் கர்நாடகாவில் பி.ஜே.பிக்குக் குவித்தவர் என்று கருதப்பட்டவருமான எடியூரப்பா ஒரு ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தார். 

ஆனாலும் விட்டுக் கொடுக்காமல் அத்வானி கர்நாடகக் கூட்டங்களில் முழங்கினார்: அதாவது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஊழல் செய்தாலும் அவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராகவே இருந்தாலும் நான் அதற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டுவேன் என்று வீராவேசமாக முழங்கினார்.

ஊழலுக்கு எதிரான இந்த யாத்திரையை அவர் தொடங்கிய போதே ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் பி.ஜே.பி. கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் அத்வானியின் யாத்திரை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடுமாறு போபாலில் இருந்து வெளிவரும் இந்தி பத்திரிக்கை நிருபர்களுக்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த லட்சணத்தில் ஊழலுக்கு எதிரான இந்த யாத்திரையை ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் பிறப்பிடத்திலிருந்து எல்.கே.அத்வானி அவர்கள் தொடங்கினார். அதாவது ஊழலுக்கு எதிராக விடுதலைப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் மிகப் பெரிய இயக்கத்தைத் தட்டியயழுப்பிய ஜே.பி. அவர்களை ஒத்த விதத்தில் அடையாளப்பூர்வமாக இந்த இயக்கத்தைத் தான் தொடங்கியதாக உலகிற்குக் காட்ட விரும்பிய அவர் அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தார். 

அவரது இந்த யாத்திரை ஊழலை மட்டும் எதிர்த்ததாக அறிவிக்கப்பட்டால் அத்தனை எடுபடாத ஒன்றாக ஆகிவிடும்; வி­சயமறிந்த மக்களில் பலர் நீங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் என்ன வாழ்கிறது என்று கேட்டுவிடுவர் என்ற எண்ணத்தில் அவர் கூடுதலாகச் சேர்த்துக் கொண்ட ஒரு வி­சயமே சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற அந்த யாத்திரையின் மற்றொரு முழக்கம். 

ஊழலே ஊழலை எதிர்ப்பதாகக் காட்டும் போக்கு

இந்தப் பின்னணியில் ஏன் ஊரும் உலகும் அறிந்த பல வெளிப்படையான காரணங்களை அடிப்படையாக வைத்து வகுப்புவாதி என்று கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின் அனைவராலும் கருதப்பட்ட நரேந்திர மோடி அவர் எதைக் குலைத்தார் என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டாரோ அந்த மத நல்லிணக்க முழக்கத்தை முன்வைத்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்? 

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்குப் பணம் வாங்கினார்கள்; வெளி நாட்டிற்கு தன் மனைவி என்று ஒரு பெண்ணை அறிவித்து அழைத்துச் சென்றார் என்பது உள்பட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நாடாளுமன்ற உறுப்பினர் பலரைத் தன் கட்சியினராகக் கொண்டிருக்கும் நிலையிலும் ஊழலுக்கு எதிராக உலா வருகிறேன் என்று அத்வானி ஏன் அறிவித்து வருகிறார்? 

அதுவும் தனது கட்சியின் முன்னாள் முதல்வர் ஒருவர் மீதுஊழல் குற்றச்சாட்டுகள் கொழுந்துவிட்டு எரியும் போதே. தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராகச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவை மிகப் பெரும் வருவாய் இழப்பினை அரசின் கருவூலத்திற்கு ஏற்படுத்தியுள்ளன என்பதெல்லாம் அசைக்க முடியாத உண்மைகள். 

எடியூரப்பாவிடம் பலிக்காத கட்சியின் ஜம்பம்

இருந்தாலும் கூடத் தற்போதைய மத்திய அரசு பி.ஜே.பியைக் காட்டிலும் ஊழல்வாதிகளைச் சற்று கூடுதல் நேர்மையுடன் நாங்கள் கையாண்டிருக்கிறோம் என்று கூறிக் கொள்வதற்கும் இடமிருக்கிறது. ஏனெனில் முதன்முதலில் எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது அவரைப் பதவி விலகக் கோரப் போவதாக பி.ஜே.பி. கட்சியின் தற்போதைய தலைவர் கட்கரி அறிவித்தார். 

ஆனால் எடியூரப்பா அதற்கு மசிந்து கொடுக்காமல் மலைபோல் நின்றார். அவர் அந்த நிலையினை எடுத்தவுடன் கட்கரி மசிந்து கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கூற்றிற்கு இணங்க கட்கரி அதன் பின் தனது வாத்தியத்தை அடக்கி அல்ல, மாற்றி வாசிக்க ஆரம்பித்தார். 

அதாவது அடுத்து கர்நாடகா மாநிலத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வழங்கும் தீர்ப்பு தங்கள் கட்சியின் ஆட்சி ஊழல் மயமானதா இல்லையா எனத் தீர்மானிக்கும் என்று கூறத் தொடங்கினார். 

சிறையில் பலர்

இந்நிலையில் ஊழல் வாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அமைப்பாக பி.ஜே.பி. விளங்கிய போது நாங்கள் ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவோ வழக்குத் தொடரவோ தயங்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி நிச்சயம் கூறலாம். 

ஏனெனில் அக்கட்சியின் சுரேஷ் கல்மாடி, அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.கழகத்தின் அ.ராசா, கனிமொழி ஆகியோர் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதோடு டெல்லி திகார் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்படவும் செய்தனர். இவ்வாறு நாம் கூறும் போது பி.ஜே.பியைச் சேர்ந்தவர்கள் ஒரு வாதத்தை நிச்சயம் முன்வைப்பர். அதாவது 2ஜி ஏலம் விடுவதில் மட்டும் எத்தனை லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த ஊழலோடு பி.ஜே.பி. கட்சியினர் செய்த ஊழல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவிற்கும் இடையில் உள்ள வேறுபாடு அல்லவா இருக்கும் என்று அவர்கள் கூறலாம். ஆனால் 2ஜி ஊழலுக்கும் ஊற்றுக்கண் பி.ஜே.பியின் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கொள்கையே என்பதை யாரும் மறைக்க முடியாது. 
காலத்தின் மாற்றம் ஊழலின் பரிமாணத்தைக் கூட்டியிருக்கலாமே தவிர ஊழல் செய்ய முடிவதற்கான அடித்தளம் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக் காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதை அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்து அதன்பின் பதவி விலகிய ஜக் மோகன் அவர்களின் அக்காலத்திய கூற்றுகளை ஊன்றிப் படித்தாலே தெரியும். 

இவ்வாறிருக்கையில் எவ்வாறு அத்வானி அவர்கள் இவ்வளவு பெரிய யாத்திரை ஊழலுக்கு எதிராக என்ற பெயரில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமது மனங்களில் தவிர்க்க முடியாமல் எழும் கேள்வியாக உள்ளது.

பாசிஸத்தைக் கொண்டு வருவதில் பி.ஜே.பிக்கு இருக்கும் கூடுதல் சாதக அம்சங்கள்

இன்று முதலாளித்துவ அமைப்புகளுக்குச் சேவை செய்யும் அனைத்துக் கட்சிகளுமே பாசிஸப் பாதையில் நடை போடக் கூடியவைகளாக உள்ளன. அதாவது எந்தவொரு கட்சியும் சம்பிரதாய அளவிற்குக்கூட ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றிக் கொண்டு சமாளிக்க முடியாத நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருக்கும் இன்றைய முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஆனாலும் பாசிஸத்தைக் கொண்டுவருவதற்கான உள்ளார்ந்த வலுவும் திறமையும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே அளவில் இருக்கிறது என்றும் கூற முடியாது. 

அந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை விடப் பாசிஸத்தைக் கொண்டு வருவதற்கான உள்ளார்ந்த வலுவும் அதற்கான தொண்டர் பலரும் பி.ஜே.பி. கட்சியிலும் அதன் பரிவாரத்திலும் மிக அதிகம் உள்ளனர். 

பாசிஸப் போக்கின் ஒரு கூறு ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினால் அது உண்மையாகிவிடும் என்பதாகும். அதையொட்டியே தங்கள் கட்சி பொது வாழ்வின் மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் தனித் தன்மை வாய்ந்த கட்சி என்ற பொய்யை அத்வானி அவர்கள் அவரது கட்சியின் ஆட்சிக் காலத்தில் முன்வைத்தார். மேலும் பாசிஸ அரசியல் வாதிகளின் வேறொரு குணாம்சம் அவர்களைப் பாதிக்கும் கேள்விகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கண்டுகொள்ளாமல் அதற்குப் பதிலளித்து ஒரு முக்கியத்துவம் கொடுத்து விடாமல் இருப்பதாகும். 

மேலும் தான் கூறுவது பொய்யாகவே இருந்தாலும் அதைப் பேரிரைச்சலுடன் கூறினால் அக்கூச்சலில் அது பொய்யயனக் கூறும் குரல் எடுபடாமல் போய்விடும் என்பதும் பாசிஸ்ட்களின் மற்றொரு யுக்தியாகும். இவற்றைப் பின்பற்றித்தான் தனது வீட்டில் இத்தனை கோளாறுகள் இருக்கும் நிலையிலும் பி.ஜே.பி. யின் தலைவர் அவர்கள் சிறிதும் கூச்சமின்றி இப்பொடியொரு யாத்திரையை ஊழலுக்கு எதிரானது என்ற பெயரில் தொடங்கியுள்ளார். 

ஆட்சியை நிலைப்படுத்த காங்கிரஸ் கையாண்ட தந்திர நடவடிக்கைகள்

அதுதவிர வேறொரு காரணமும் அவரது யாத்திரையின் பின்னணியில் உள்ளது. அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்குப் பின் தட்டுண்டு தடுமாறி வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியைக் காங்கிரஸ் கட்சி நிலைப்படுத்த முடிந்ததன் பின்னணியில் காங்கிரஸ் கடைப்பிடித்த இரண்டு யுக்திகள் உள்ளன. 

ஒன்று பி.ஜே.பி. கட்சி எதிர்பார்த்ததற்கு மாறாக திருமதி சோனியா காந்தி பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறித் தள்ளியது. மற்றொன்று எதிர்பாராத விதத்தில் கட்சி அரசியலில் பல காலம் இருந்து ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாத ஒருவரை அதாவது திருவாளர் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தது. 

ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகாதவர் என்பது மட்டும் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராகக் கொண்டுவரப் பட்டதற்கான காரணம் என்று கூற முடியாது. அதில் வேறொரு ஆழமானதும் அழுத்தமானதுமான வி­சயமும் இருந்தது. உலகமயச் சூழலில் அந்நிய மூலதனம் வருவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தரவல்ல ஒருவர் பிரதமராக இருந்தால் அது ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்; அந்த அடிப்படையில் பல காலம் பொருளாதார நிபுணர் என்ற ரீதியில் உலக நிதி நிறுவனங்களில் பொறுப்புகள் வகித்த மன்மோகன் சிங் அவர்களின் அனுபவமும் வெளிநாட்டு அதிகார வர்க்கத்தினுடனான பரிச்சயமும் அவர் பிரதமராக வந்தால் அது ஒரு மேலான முகத்தோற்றத்தை இந்திய அரசிற்கு வழங்கும் என்பதும் கூட ஒரு முக்கிய கருது பொருளாக அப்போது இருந்தது. 

தற்போது தொடர்ச்சியாக நடந்துள்ள பல ஊழல்கள் தற்போதுள்ள இரண்டாவது கட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்கு மிகப்பெரும் அளவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளன. அதை உரிய முறையில் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே பி.ஜே.பி. தலைவரின் இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. 

நமது நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும் அக்கட்சிகளில் ஊரறிந்த உலகறிந்த பல தலைவர்கள் இருந்தாலும், அவர்களில் ஏறக்குறைய அனைவருமே நற்பெயரற்றவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பதவி ஆசை குறைவின்றி இருந்தாலும் அவர்கள் அனைவரும் இதுபோன்ற யாத்திரை ஒன்றைத் தொடங்காத நிலையில் அத்வானி அவர்கள் மட்டும் இதனைத் தொடங்கியதற்கான காரணம் அவர் ஏதோ மதிப்புமிக்க அரசியலை உயர்த்திப் பிடிப்பவராகத் தொடர்ச்சியாக ஒரு வகைப் பாசிஸத் தனத்தின் மூலம் காட்ட முயல்வதாகும். 

ஏனெனில் இதற்கு முன்பும் அவர் அவரது கட்சி குறித்து ஒரு கருத்தை அவரது கட்சி ஆட்சியில் இருந்த போது முன்வைத்தார். அதாவது பிற கட்சிகளில் இருந்தெல்லாம் வேறுபட்டதொரு கட்சி (A Party with a difference  ) தன் கட்சி என்று அவர் கூறினார். அதாவது இருக்கும் தலைவர்களிலேயே காந்தியடிகளை ஒத்த தலைவர் தானே என்று காட்டிக்கொள்ள அவர் முனைந்தார். 

காந்தியடிகள், ஜே.பி. போன்றவர்களுக்கும் இவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. சரியாகவோ தவறாகவோ செளரி செளரா சம்பவம் நிகழ்ந்தவுடன் தான் நம்பும் அகிம்சைக்கு எதிரானதாக அவ்வியக்கம் சென்று விட்டது என்று அறிந்த நிலையில் தன் கட்சியிலிருந்து மட்டுமின்றி விடுதலைப் போரில் அவரது கட்சியோடு இணைந்திருந்த அனைத்து வட்டாரங்களில் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில் அந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தச் சொன்னார். 

அவரும் ஜே.பியும் அவர்களுடைய மதிப்பையும் மரியாதையையும் மதிப்புமிக்க அரசியலின் வளர்ச்சிக்காக அவர்கள் எடுத்த நிலைகளையும் மையமாக வைத்தே அவர்களது அரசியலை வளர்த்தெடுத்தனர். அவர்கள் அவர்களது அரசியலைத் தொடங்கிய போது மிகப் பெரிய அமைப்பு ரீதியான வலு அவர்களது இயக்கத்திற்கு இருக்கவில்லை. குறிப்பாக ஜே.பி. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக இருந்த போதும் பல காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் தான் ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தைத் தொடங்கினார். ஊழலுக்கு எதிரான அவரது முழக்கம் அதற்கு ஆதரவாக ஏராளமான மக்களை அவருடன் கொண்டுவந்து நிறுத்தியது. அதன் விளைவாகவே நேருவுக்குப் பின் காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவராக விளங்கிய இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியே அகன்றது. 

அமைப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கும் போக்கு

அதாவது முழக்கத்தை முன்வைத்து காந்தியடிகளும், ஜே.பியும் ஸ்தாபனத்தை உருவாக்கினர். ஆனால் அத்வானி அவர்கள் தனக்கிருக்கும் ஸ்தாபனத்தை முன்னிறுத்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றக் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார். 

ஆனால் அயோத்திப் பிரச்னையை முன்வைத்து அத்வானி அவர்கள் தொடங்கிய பழைய ரத யாத்திரையைப் போல் இந்த ரத யாத்திரை அவருக்கோ அவரது கட்சிக்கோ பெரிய ஆதாயத்தை தேடித்தரப் போவதில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி உட்பட ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள அனைத்துக் கட்சிகளும் ஏதாவது ஒரு விதத்தில் வகுப்புவாத நிலைகளை எடுப்பவையாக இருந்தாலும் வகுப்புவாத முழக்கத்தை பி.ஜே.பி. முன்வைப்பதற்கும் பிற கட்சிகள் முன்வைப்பதற்கும் ஒரு மிகப்பெரும் வேறுபாடு இருக்கவே செய்கிறது. 

பி.ஜே.பி. கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வகுப்புவாத முழக்கத்தை இடைவிடாமல் சிறிய பெரிய அளவுகளில் விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்து இன்று வரை வைத்துக் கொண்டிருக்கும் பாரம்பரியம் இல்லை. எனவே அந்த முழக்கத்தை முன்வைத்து அரசியல் செய்யும் போது பி.ஜே.பி. கட்சியினருக்கும் சங் பரிவாரத்திற்கும் ஏற்படும் உளப்பூர்வ ஒன்றுதலும் ஈடுபாடும் வேறு முழக்கங்களை வைக்கும் போது அவ்வமைப்பினரிடையே ஏற்படுவதில்லை. மேலும் ஊழலுக்கு எதிரான நிலையைப் பி.ஜே.பி. எடுப்பது ஒரு வே­சதாரித்தனம் என்பதும் ஓரளவிற்கு மக்களிடையே அம்பலமாகியும் உள்ளது. 

எனவே ஊழல் அரசியலால் காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தடுமாறி நிற்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு இடையிலான ஒற்றுமை குலைந்து அவநம்பிக்கை மேலோங்கியுள்ள பின்னணியில் தனது அமைப்பு ரீதியான வலுவினைக் கொண்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கருதி அவ்வாறு ஆட்சியைப் பிடிப்பதற்கு நம்பிக்கையுடன் பணியாற்ற ஊழியர் களுக்கு உற்சாகம் தருவதற்காக இந்த ரத யாத்திரை பயன்படும் என்ற அடிப்படையில் அத்வானி இதனை மேற்கொள்கிறார். 

சரி, அத்வானி அவர்கள் இத்தகைய உள்நோக்குடன் தனது ரத யாத்திரையைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றால் நரேந்திர மோடி மதநல்லிணக்க உண்ணாவிரதம் தொடங்கியதன் பின்னணி என்ன? 

இனவெறி அமைப்புகள் ஏற்புடையவையல்ல

இரண்டாவது முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி ஏற்பட்ட பின்பு பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பதே கேள்விக்குரிய ஒரு வி­சயமாக ஆகிப் போனது. அதற்குக் காரணம் காங்கிரஸூக்கு எதிராக எந்த வி­சயங்களையெல்லாம் எடுக்க முடியுமோ அவை அனைத்தையும் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அக்கட்சி எடுத்த பல நடவடிக்கைகள் ஆகும். 

அதில் ஒன்று அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் போது பி.ஜே.பி. எடுத்த எதிர்ப்பு நிலைபாடாகும். அதாவது அக்கட்சியும் அதன் தாய்க்கட்சியான ஜனசங்கமும் காலங்காலமாக எடுத்த நிலைபாடுகள் அனைத்துமே ஒரு அதிதீவிர தேசியவாதத் தன்மை கொண்டவையாகும். அத்தகைய தேசியவாத முழக்கங்கள் ஆளும் வர்க்கத்தினால் அதற்குத் தேவைப்படும் போதெல்லாம் குறைவின்றிப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ளன. ஆனால் சில சமயங்களில் அத்தகைய முழக்கங்கள் ஆளும் வர்க்கத்திற்குச் சுமைகளாகவும் ஆகிவிடுகின்றன. 

அதனால் தான் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் கூட மிதமிஞ்சிய தேசிய இனவெறிவாத அமைப்புகளைக் காட்டிலும் பெயரளவிற்கேனும் தாராளவாத மதிப்புகளைக் கொண்டுள்ளவை எனத் தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகளை உடனடியாக ஆளும் வர்க்கம் ஏற்றுக் கொள்கிறது. எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாராளவாத ஜனநாயகப் பாவனைகளுடன் செயல்படும் கட்சிகளையே ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய தாராளவாதப் பாவனையுடன் செயல்படும் கட்சியான காங்கிரஸ் கட்சி இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அதாவது அது விரும்பும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு உதவிபுரியும் என்று கருதிக் கொண்டு வந்ததே அணு ஒப்பந்தம் ஆகும். 

அந்த ஒப்பந்தத்தை பி.ஜே.பி. எதிர்த்தது ஆளும் வர்க்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஏற்புடையதாக இல்லை. பி.ஜே.பியின் அந்நிலைபாடும் அதன் தோல்விக்கு ஒரு காரணமாகும்.

ஜின்னாவிற்குப் புகழாரம் சூட்டப் போய்

இதுதவிர அத்வானி அவர்கள் தனது கட்சி ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட பாகிஸ்தான் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பிய போது பாகிஸ்தானின் ஸ்தாபகத் தலைவர் முகமது அலி ஜின்னா குறித்து வெளியிட்ட, அதாவது ஜின்னா சில தகுதிகள் கொண்ட தலைவர் என்ற கருத்து சங் பரிவாரத்தின் அடிப்படையான மனநிலைக்கு உகந்ததாக இல்லை. எனவே அவர் அக்கட்சி அணிகளால் ஓரங்கட்டப்பட்டார். அதாவது பாபர் மசூதி இடிப்பிற்கு வழிவகுத்த அவரது ரதயாத்திரை அவர் குறித்து உள்நாட்டிலும் உலக அரங்கிலும் ஏற்படுத்திய வகுப்புவாதி என்ற முகத் தோற்றத்தை மாற்றுவதற்கு உதவும் என்ற அடிப்படையிலேயே அவர் ஜின்னா குறித்து மேற்குறிப்பிட்ட கருத்துக்களை முன்வைத்தார். 

அது அவர் பதவிக்காக அடிப்படை நம்பிக்கைகளையே தேவை ஏற்பட்டால் கைவிடக் கூடியவர் என்ற எண்ணத்தை அவரது அணிகளிடையே ஏற்படுத்திவிட்டது. அதற்கும் அசராத அவர் தான் பதவி ஆசை இல்லாதவர் என்று காட்டிக் கொள்வதற்கு அதுதான் ஒரு சாதமான சூழல் என்பதை உணர்ந்து கொண்டு பிரதமராகும் ஆசை தனக்கு இல்லை என்று அப்போது டாம்பீகமாக அறிவித்தார். உண்மையில் அவரைப் பிரதமராக்கும் எண்ணம் அவரது கட்சியின் அணிகளுக்கு அப்போது இல்லை. 

புனித வேடத்தில் மோடி

அவரது இந்த மனநிலை தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல் தலைவிரித்தாடும் நிலைமை தோன்றும் வரை நீடித்தது. இந்த நிலையில் தான் நரேந்திர மோடியை அவர் தொடர்ச்சியாக இரண்டு முறை மகத்தான தேர்தல் வெற்றியை அவரது மாநிலத்தில் சாதித்துள்ளதைக் கணக்கிற்கொண்டும் அந்த மாநிலத்தைத் தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் மாநிலமாக ஆக்கியுள்ளார் என்ற இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு தோற்றத்தை முன்னிறுத்தியும் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகக் கருத வைக்கலாம் என்ற எண்ணம் அக்கட்சியில் சிலருக்குத் தோன்றியது. 

ஆனால் அதைப் பயன்படுத்துவதில் அவருக்குப் பல சிக்கல்கள் இருந்தன. தேசிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள பல கட்சிகள் அவர் பிரதமருக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை வெளிப்படையாகவே விரும்பவில்லை. கடந்த நாடாளுமன்றத்திற்கான தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு முக்கிய அங்கமான பீஹாரைத் தற்போது ஆட்சி செய்யும் நிதிஷ் குமார், நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக தன் மாநிலத்திற்கு வரக் கூடாது என்று வெளிப்படையாகவே பி.ஜே.பி. தலைமையிடம் கூறிவிட்டார். ஏனெனில் அவரது வருகை சிறுபான்மை இனத்தினரின் வாக்குகளை அவரது கட்சி பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று அவர் கருதினார். 

இந்த நிலையில் ஏதாவது ஒரு புனித வேடம் புனையாமல் அப்பதவிக்கு உகந்தவராக தன்னைக் காட்ட முடியாது என்ற நிலை நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது. அவ்வாறு புனித வேடம் புனைவதற்கு ஏற்றதொரு பின்னணியும் குஜராத்தில் தோன்றியது. ஒரு முக்கிய சிறுபான்மை முஸ்லீம் இனத் தலைவர் மோடி குறித்து வெளியிட்ட சில அவர் அத்தனை மோசமானவரல்ல என்ற மோடிக்கு சாதகமான கருத்துக்கள் அந்தப் பின்னணியை ஏற்படுத்தியது. 

அதைப் பயன்படுத்திக் கொண்டு தானும் தான் ஆளும் குஜராத்தும் மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படுகின்றோம்; உண்மையில் தானோ தனது மாநில மக்களோ சிறுபான்மை இனத்தவருக்கு எதிரானவர்கள் அல்ல; அதற்கு எடுத்துக்காட்டு சிறுபான்மை இனத் தலைவர் ஒருவரே தன்னைப்பற்றி வெளியிட்டுள்ள தான் நல்லவன் என்ற கருத்து என்று காட்டி தான் ஒரு வகுப்புவாதி அல்ல என்ற தோற்றத்தை பெரிதாகச் சித்தரித்து அரசியல் ஆதாயம் ஈட்டுவதற்காக அந்த உண்ணாவிரதத்தை அவர் மேற்கொண்டார். ஆனால் இந்தச் சூழ்நிலையில் பி.ஜே.பியின் ஆட்சி மீண்டும் வரும் வாய்ப்பு கூடுதல் பிரகாசம் அடைந்த பின்னணியில் அத்வானி அவர்களுக்கும் பிரதமராகும் ஆசை இயற்கையாகவே அரும்பத் தொடங்கியது. எனவே தான் மோடியின் உண்ணாவிரதம் முடிந்த சில தினங்களிலேயே தனது ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். 

அதாவது இவ்விரு நிகழ்வுகளும் ஒரு வகையில் பி.ஜே.பி. கட்சித் தலைமைக்கிடையில் பதவிப் போட்டியை மையமாகக் கொண்டு நிலவும் பனிப்போருமாகும். நமது நாட்டின் அரசியல் எத்தனை மோசமாக பாசிஸத் திசை வழியில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை முன்னறிவிக்கும் நிகழ்வுகளே இந்த ரத யாத்திரையும் உண்ணாவிரதமும். சைத்தான்கள் வேதம் ஓதுகின்றன என்ற வாசகத்தையே இவர்கள் முன்வைத்துள்ள மத நல்லிணக்க, ஊழல் எதிர்ப்பு முழக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. 

இதுதவிர அத்வானி அவர்கள் சில காலமாகவே சுவிஸ் வங்கிக் கணக்குகளில் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார். கடந்த தேர்தலின் போதே இந்தக் கருத்தை மீண்டும் மீண்டும் அவர் முன்வைத்தார். 

ஏனெனில் அவருக்கு நன்கு தெரியும் சுவிஸ் வங்கியில் ஏராளமான கறுப்புப் பணம் பல இந்திய அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்களால் பலகாலமாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது. இது காங்கிரஸ் கட்சியின் தலைமையில் மத்தியல் ஆட்சி ஏற்பட்டவுடன் தோன்றிய வி­சயமல்ல. காலங்காலமாக இருந்து கொண்டுள்ள வி­சயம். 

அவ்வாறு இருக்கும் போது அவரது கட்சியின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கறுப்புப் பணத்தைக் கொணர என்ன முயற்சிகள் அவரது கட்சியால் மேற்கொள்ளப்பட்டன என்ற கேள்வி இயல்பாகவே எவருக்கும் எழும். ஆனால் நாம் ஏற்கனவே பார்த்த விதத்தில் அது போன்ற கேள்விகளைக் கண்டுகொள்ளும் வழக்கம் பாசிஸ அரசியல் வாதிகளுக்கு இல்லை. அப்படி யாரேனும் கூறினாலும் அதற்குச் சம்பந்தமில்லாத வேறொரு வி­யத்தில் பேரிரைச்சலைக் கிளப்பி அதனை அவர்கள் அமுக்கிவிடுவர். 

இடைவிடாமல் பயன்படும் முழக்கத்தின் தேவை

மேலும் பி.ஜே.பி. கட்சி அதன் அரசியல் அனுபவத்தில் ஒரு படிப்பினையை நிச்சயம் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கவே முடியாது. அதாவது அது அரசியல் செய்வதற்கு இடைவிடாமல் பயன்படும் முழக்கம் ஏதாவது இருந்து கொண்டே இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட முழக்கமாக பலகாலமாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்னை இருந்தது. ஆனால் அளவிற்கு அதிகமாக அதனை இழுத்து பி.ஜே.பி. அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. பொன்முட்டையிடும் வாத்தை அறுத்து முட்டை எடுத்த கதையாக அது ஆகிவிட்டது. 

தற்போது அதன் ஆயுதச் சாலையில் அத்தகைய முக்கிய ஆயுதம் முற்றிலும் இல்லாது போய்விட்டது. அதையொத்த விதத்தில் சக்தி வாய்ந்ததாக இல்லாவிடினும் கருவேப்பிலை போல் எப்போதுமே பயன்பட வல்லதாக இந்த கறுப்புப்பண முழக்கம் ஓரளவு அதற்குப் பயன்படும் தன்மை கொண்டதாக உள்ளது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் போல. அந்த அடிப்படையில் அத்வானி அவர்கள் இதனை எடுத்துள்ளார். 

அதற்கான பின்னணி தற்போது ஏற்பட்டுள்ள மின்னணு சாதன வளர்ச்சியாகும். அது இதுபோன்ற பல திருட்டுத் தனங்களை முற்றிலும் ரகசியமாக வைத்திருக்க முடியாத ஒரு சூழ்நிலையைத் தோற்றுவித்துள்ளதே. சில காலங்களுக்கு முன்பு ஊடகங்கள் அரசல் புரசலாக இந்தியாவில் எந்தெந்தப் பிரமுகரெல்லாம் சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்திருக்கிறார் என்ற வி­யங்களை வெளிப்படுத்தின. அந்தப் பின்னணியில் இந்த முழக்கத்தை அத்தனை எளிதில் இது முடிந்து விடாது என்ற அதீத நம்பிக்கையுடன் அத்வானி அவர்கள் கையில் எடுத்தார். 

கைமாறிய சி.பி.ஐ(எம்)ன் முழக்கம்

ஒரு வகையில் இதற்காக சி.பி.ஐ(எம்). கட்சிக்கு நன்றிக்கடன் பட்டவரே திருவாளர் அத்வானி. அடிப்படை சமூகமாற்ற முழக்கத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்ட அக்கட்சி அது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் எவ்வாறு நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்கப் போகிறது என்ற கேள்வி எழும் போதெல்லாம் அதற்குப் பதிலாக கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவோம்; நிலச்சீர்திருத்தம் செய்வோம் என்றே கூறிவந்தது.

நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இப்போது இருக்கக்கூடிய மிகப்பெரும் பிரச்னை முதலாளித்துவ நெருக்கடியால் ஏற்பட்டுள்ளதாகும். கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்ந்து அரசுத் துறையில் பல நிறுவனங்களை ஏற்படுத்தினாலும் கூட முதலாளித்துவ அரசு எந்திரத்தை அப்படியே பராமரித்துக் கொண்டு அதனைச் செய்யும் போது அவை பல தனியார் முதலாளித்துவ நிறுவனங்கள் வளர்வதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்குவனவாகவே அமையும். 

தற்போதைய முதலாளித்துவ நெருக்கடி எப்படிப்பட்டதென்றால் சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசத்தின் வீழ்ச்சிக்குப் பின் உருவாகிய மிகப்பெரிய சந்தையே குறுகிய காலத்தில் உலக முதலாளித்துவத்தால் பயன்படுத்தி முடிக்கப்பட்டு விட்டது. அந்த நிலையில் கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்ந்து அதனால் செய்யப்படும் முதலீடுகள் இந்திய முதலாளித்துவத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் கபளீகரம் செய்யப்பட்டு காணாமல் போய்விடும். 

அது மட்டுமல்ல பெருகிவரும் மக்கள் தேவைக்குத் தற்போது உள்ளதற்கு மேலாக ஒரு அங்குல அளவு கூட நிலப்பரப்பை நீட்ட முடியாது. எனவே நிலச் சீர்திருத்தம் நமது பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக இனிமேல் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இருந்தும் அவர்களது அப்பட்டமான நாடாளுமன்றவாதம் அந்த முழக்கங்களை நோக்கி அவர்களைத் தள்ளியது. அதில் ஒரு முழக்கத்தையே இதுதான் தருணம் என்று அத்வானி அவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டுவிட்டார். இதுவே, அதாவது தங்களது ஸ்தாபன வலுவினை மூலதனமாகக் கொண்டு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ள நிலையில் மக்களின் குறைந்த அளவிலான அரசியல் ஞானத்தில் அதீத நம்பிக்கை வைத்துத் தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டித் தேர்தல் வேலை செய்ய வைப்பதற்காகப் பாசிஸ்டுகளுக்கே உரிய முறையில் பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த நரேந்திர மோடி மற்றும் அத்வானி ஆகியோரால் நடத்தப்படுவதே இந்த உண்ணாவிரதமும் ரத யாத்திரையுமாகும்.

No comments:

Post a Comment